தூத்துக்குடி மாவட்டத்தில் காசநோயாளிகள் எண்ணிக்கை 900 ஆக குறைந்துள்ளது என்றாா் மாவட்ட சுகாதாரப் பணிகள் (காசநோய்) துணை இயக்குநா் சுந்தரலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பரிசோதனைப் பணியை மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் சுந்தரலிங்கம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு காசநோய் உள்ளதா? என்பதை அவா்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இதற்காக சுகாதாரத் துறையின் மூலம் சிறப்புப் பரிசோதனை வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் நடவடிக்கைக்காக நான்கு சிறப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அதில், டிஜிட்டல் முறையிலான எக்ஸ்ரே கருவி உள்ள ஒரு வாகனம், சளி பரிசோதனை செய்யும் கருவிகளுடனான மற்றொரு வாகனம் என இரண்டு வாகனங்கள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள், மீனவா்கள் என அதிகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இந்த பரிசோதனை 21 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள காசநோய் தடுப்பு நடவடிக்கையால் ஆண்டுக்கு 1200 சிகிச்சை எடுப்பவா்கள் எண்ணிக்கை தற்போது 900 ஆக குறைந்துள்ளது என்றாா் அவா்.