பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் சார்பில் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலமுருகன்(கடலையூர்), ஜெயராமன்(எட்டயபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஸ்கேனர் முறையில் பால் பரிசோதனை செய்து இணையதளத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும், சங்கம் வழங்கும் பாலுக்கு கொள்முதல் விலையாக பசும்பால் லிட்டருக்கு ரூ.40, எருமை பால் லிட்டர் ரூ.50 என உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்துச் சங்கங்களுக்கும் பால் தரம் பார்க்கும் இயந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலர் கே.முகமது அலி, தூத்துக்குடி மாவட்டச் செயலர் கே.பி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன், தமிழ்நாடு விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த ஜி.ராமசுப்பு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மகாலிங்கம், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் உள்பட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.