உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி பள்ளியில், தென் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
பிரீமியர் மற்றும் ரெயின்போ சதுரங்க கழகங்கள் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் தூத்துக்குடி , திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 112 பேர் கலந்து கொண்டனர். போட்டியை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளை மேலாளர் ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார். 9 வயதிற்கு உள்பட்டோர், 15 வயதிற்கு உள்பட்டோர், பொதுப் பிரிவினர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 9 வயதிற்கு உள்பட்டோர் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரிபிரசாத் முதலிலிடமும், திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய் கார்த்திக், விவின் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமும் பிடித்தனர். 15 வயதிற்கு உள்பட்டோர் பிரிவில், திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு முதலிலிடமும், தூத்துக்குடியைச் சேர்ந்த கவினேஷ், ராஜரத்தினவேல் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
பொதுப் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர், குருசபரி திருமலை ஆகியோர் முறையே முதலில் மற்றும் இரண்டாமிடத்தைப் பிடித்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வயது குறைந்த இளம் வீரருக்கான சிறப்புப் பரிசை ஆல்வின் பால் பெற்றார்.
பரிசளிப்பு விழாவிற்கு பள்ளித் தாளாளர் பி.எஸ்.ஆர்.ஜெயானந்தன் தலைமை வகித்தார். ஆறுமுகனேரி விவசாய அபிவிருத்தி சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்வர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரெயின்போ சதுரங்க கழக தலைவர் முருகேசபாண்டியன் வரவேற்றார். பிரீமியர் சதுரங்க கழகத் தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.