திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் கடும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை வேண்டி கோயில்களில் யாகம் செய்திடுமாறு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கோயில் உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் திருக்கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரி தலைமையில் வேதவிற்பன்னர்கள் வருண ஜெபம் செய்தனர். யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் சன்னதியில் உள்ள நந்திபகவானை சுற்றி நீர் நிரப்பப்பட்டது. அதன்பின்னர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்ப நீரானது திருக்கோயில் கடலில் ஊற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை, உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.