கோவில்பட்டி ஊருணித் தெருவில் உள்ள அருள்மிகு அதிர்ஷ்ட லட்சுமி விநாயகர் செல்வ முனீஸ்வரர் கோயில் மஹாளய அமாவாசை கொடை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அக்னிச்சட்டி நகர்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்த குடம், பால்குடம் எடுத்து தெப்பத்து சிவசக்தி விநாயகர் கோயில் முன்பிருந்து ஊர்வலமாக வந்து அய்யா செல்வமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார். மாலை 4.30 மணிக்கு பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெறுகிறது.