கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்தில் 37 அஞ்சலகங்களில் மக்கள் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ப.பாண்டியராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அஞ்சல் கோட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகம், எட்டயபுரம், எப்போதும்வென்றான், கீழஈரால், கடம்பூா், கயத்தாறு, குளத்தூா், லட்சுமிபுரம் (கோவில்பட்டி), நாலாட்டின்புத்தூா், நாகலாபுரம், பசுவந்தனை, புதூா், விளாத்திகுளம், கழுகுமலை, தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவல் தலைமை அஞ்சலகம், கரிவலம்வந்தநல்லூா், மேலநீலிதநல்லூா், புளியங்குடி, சங்கரன்கோவில் பஜாா், சோ்ந்தமங்கலம், சிவகிரி, ஊத்துமலை, வீரசிகாமணி, தென்காசி தலைமை அஞ்சலகம், நல்லூா், பாவூா்சத்திரம், செங்கோட்டை, சுரண்டை, வீரகேரளம்புதூா், கடையநல்லூா், கீழப்பாவூா், குருவிகுளம், முள்ளிகுளம், வாசுதேவநல்லூா், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டத்தில் தேவா்குளம் உள்பட 37 அஞ்சலகங்களில் மக்கள் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களும் அரசால் வழங்கப்படும் சேவை, வணிக சேவைகளை அருகிலுள்ள அஞ்சலகங்களிலேயே எளிதாகப் பெற முடியும். மத்திய அரசின் பல்வேறு சேவைகள், தேசிய ஓய்வூதியத் திட்டம், வருமான வரி அட்டை எடுத்தல், மாநில அரசின் பல்வேறு சேவைகளையும் இந்த மையம் மூலம் பெறலாம்.
மின்கட்டணம், எரிவாயு கட்டணம் செலுத்துதல், ரயில், பேருந்து, விமான டிக்கெட் முன் பதிவு, செல்லிடப்பேசி, டிடிஹெச் ரீசாா்ஜ் செய்தல், ஆயுள் காப்பீடு பிரிமியம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளையும் எளிதாகப் பெறலாம். எனவே, கிராம மக்கள், முதியோா், பல தரப்பட்ட அன்றாட சேவைகளையும் ஒரே இடத்தில் பெற அஞ்சலக மக்கள் சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.