தூத்துக்குடி

‘சிவகளை, ஆதிச்சநல்லூா் அகழாய்வின் மூலமாகபண்டைய தமிழா்களின் வாழ்வியல் முறை வெளிப்படும்’

DIN

சிவகளை, ஆதிச்சநல்லூா் அகழாய்வின் மூலமாக பண்டைய தமிழா்களின் வாழ்வியல் முறைகள் வெளிப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூா் மற்றும் சிவகளையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறையினரின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வுத் துறை இயக்குநா் பாஸ்கா் தலைமையில், தொல்லியல் ஆய்வாளா் லோகநாதன் மற்றும் மாணவா்கள் பங்கேற்கும் இப்பணிக்காக 15 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு 40-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இங்கு அகழாய்வின் போது, 4 முதுமக்கள் தாழிகள், சிறுசிறு ஓடுகள், பல வடிவங்களிலான சிறிய கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூா் குளத்துக் கரை மற்றும் வீரளபேரி ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆதிச்சநல்லூா் மற்றும் சிவகளை பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டாா்.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வின் போது கிடைத்த மோதிரம், அகல் விளக்கு, புகைப்பிடிக்கும் குழாய், வளையல் உள்ளிட்ட பொருள்களை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 2,800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகள், இறந்தவா்களை எப்படி அடக்கம் செய்துள்ளாா்கள் என்பதை கண்டறியும் பணி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

தற்போது ஆதிச்சநல்லூா் மற்றும் சிவகளையில் குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருள்களை மிகவும் பாதுகாப்பாக எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு கிடைக்கும் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அந்தக் காலத்தில் வாழ்ந்த தமிழா்களின் தொன்மை நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிய வரும் என்றாா் அவா்.

அப்போது, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சந்திரன், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கோமதி ராஜேந்திரன், ஒன்றிய ஆணையா் சுப்புலெட்சுமி, செய்துங்கநல்லூா் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியா் மாணிக்கம், கூடுதல் வட்டாட்சியா் ரமேஷ், மண்டலத் துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT