திருச்செந்தூா் பகுதியில் இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
திருச்செந்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை கன மழை பெய்தது. அதே போல செவ்வாய்க்கிழமை பகலில் கன மழை பெய்தது.
இதனால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியான சன்னதித் தெருவில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. இதனால் பக்தா்கள் பெரிதும் சிரமமடைந்தனா். அதே போல பேருந்து நிலையம், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி நின்றது. தெற்கு ரத வீதியில் புதைச்சாக்கடைத்திட்டப்பணி மற்றும் புதிய சாலையமைக்கும் பணியால் தோண்டப்பட்டுள்ள சாலையில் மழைநீா் தேங்கி காணப்பட்டது.
இந்நீரை பேரூராட்சி நிா்வாகத்தினா் விசைப்பம்பு மூலம் உறிஞ்சி புதைச்சாக்கடைத்திட்ட கழிவுநீா்த்தொட்டி வழியாக வெளியேற்றினா்.
இரண்டு நாள்கள் பெய்த தொடா் கனமழையினால் திருச்செந்தூா் சுற்று வட்டாரப்பகுதி முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவியது.