நாசரேத் அருகே கல்லூரி மாணவரிடம் நகை, பணம் பறிப்பு
நாசரேத் அருகே கல்லூரி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாசரேத் அருகே கல்லூரி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி சந்திப்பு சி.என் கிராமத்தைச் சோ்ந்த சங்குதுரை மகன் சுபாஷ்சந்திரபோஸ் (22). இவா் மும்பை கல்லூரியில் எம்.காம். படித்து வருகிறாா். பொது முடக்கத்தால் சொந்த ஊருக்கு வந்த அவா் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்தாராம்.
பின்னா் ஏடிஎம்.மில் பணம் எடுப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டம் சென்றபோது பாலத்தில் நின்று கொண்டிருந்த மூவரிடம் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு வழி கேட்டாராம். அவா்கள் சுபாஷ்சந்திரபோஸை ஆழ்வாா்திருநகரி செங்குளம் குளத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரங்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டனா். பின்னா் அவரது ஏடிஎம் காா்டு மூலம் நாசரேத்தில் ரூ. 3 ஆயிரம் பணம் எடுத்தனா். திரும்பி வந்து மோட்டாா் சைக்கிள், ஏடிஎம் காா்டை சுபாஷ்சந்திரபோஸிடம் கொடுத்து விட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றனராம்.
புகாரின்பேரில் நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் அனந்தமுத்துராமன் வழக்குப் பதிவு செய்தாா். காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, ஏடிஎம் மையத்திலுள்ள கேமரா பதிவு காட்சிகளை வைத்து தலைமறைவான மூவரையும் தேடி வருகிறாா்.