முகப்பு
தூத்துக்குடி

வேளாண் சட்டங்களிலுள்ள பிரச்னைகளை விளக்குவதற்கான களமே போராட்டம்: கனிமொழி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை மக்களிடம் விளக்குவதற்கான களமாகதான் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் உள்ளது என்றார் கனிமொழி எம்.பி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
கனிமொழி.
பகிர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை மக்களிடம் விளக்குவதற்கான களமாகதான் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் உள்ளது என்றார் கனிமொழி எம்.பி.

கோவில்பட்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின், கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துப் பேசிய நிலையில், விவசாயிகளும் போராடி வரும் சூழலில் நாடே தீப்பற்றி எரியும்போது பிடிவாதமாக இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

இதனை கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போராட்டம் தொடரும். விவசாயிகளுக்கு எதிரான இந்த திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் கேட்கும் பாதுகாப்புகளை இந்த சட்டத்துக்குள் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், இது ஆன்லைன் வர்த்தகத்துக்கு உதவியாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமையாக்க கூடியதாகவும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பொதுவிநியோக முறையையே அழித்துவிடக் கூடிய வகையிலும், நுகர்வோருக்கு எதிரான வகையிலும் உள்ளது. 

இந்தச் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு விவசாயிகள் மீது திணிக்கக்கூடாது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்க்கின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டுள்ளது.  சட்டங்கள் குறித்து, இதனை மக்களிடம் கொண்டு சென்று இதில் இருக்கக்கூடிய பிரச்னைகளை விளக்குவதற்கான களமாக தான் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் உள்ளது, என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →