திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆக.8-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏற்கெனவே கடந்த ஆக. 1, ஆக. 2, ஆக.3 மற்றும் ஆடி அமாவாசை (ஆக. 8) ஆகிய விசேஷ நாள்களில் அதிகளவிலான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால் கரோனா தொற்று பரவாமல் இருக்க திருக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆக. 8-ஆம் தேதி வரை இத்திருக்கோயில் மற்றும் குலசேகரன் பட்டினம், முத்தாரம்மன் கோயில் மற்றும் கோவில்பட்டி, பூவன நாத சுவாமி திருக்கோயிலிலும் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது எனவும், மேற்படி நாள்களில் திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.