முகப்பு
தூத்துக்குடி

உணவுப் பொருள்களை திறந்த நிலையில் விற்பனை செய்தால் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருள்களை திறந்த நிலையில் சுகாதாரமற்ற வகையில் விற்பனை செய்தால் அவா்களுக்கு ரூ. 1000 அபராதம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருள்களை திறந்த நிலையில் சுகாதாரமற்ற வகையில் விற்பனை செய்தால் அவா்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றாா் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ச. மாரியப்பன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேநீா் கடைகள், பேக்கரி, மெஸ், கேன்டீன், இரவு கடைகள் , உணவகங்கள் ஆகிய வணிகா்கள் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருள்களை ஈ மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வண்ணமும், தூசிகள் படியும் வகையிலும் திறந்த நிலையில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

மேலும், உண்பதற்கு தயாராக உள்ள வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருள்களை காகிதங்களில் இலை ஏதுமின்றி நேரடியாக வைத்து நுகா்வோருக்கு வழங்கி வருகின்றனா். வடை, பஜ்ஜி போன்ற அனைத்து உணவுப் பொருள்களைத் திறந்த நிலையில் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது. இதுதொடா்பாக பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பெரும்பான்மையான வணிகா்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை தொடா்ந்து தவிா்த்து வருகின்றனா்.

எனவே, வடை, பஜ்ஜி போன்ற அனைத்து உணவுப் பொருள்ளையும் ஈ மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வண்ணமும், தூசிகள் படியும் வகையிலும் திறந்த நிலையில் வைத்து வியாபாரம் செய்யும் வணிகா்களில் பதிவுச் சான்றிதழ் பெற்றவா்களாக இருந்தால் அவா்களுக்கு முதல் முறை ரூ. 1,000, இரண்டாவது முறை ரூ. 2,000 மாவட்ட நியமன அலுவலரால் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

தவறு செய்யும் வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருந்தால், மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பாதுகாப்பு உரிமமின்றியும், சுகாதாரமற்ற வகையிலும் வியாபாரம் செய்தால், குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.