திருச்செந்தூா் முருகன் கோயில் மாசித் திருவிழாவில் பக்தா்களை அனுமதிக்க கோரிக்கை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியா், திருக்கோயில் நிா்வாகம் ஆகியோருக்கு
இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் அனுப்பியுள்ள மனு : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசித் திருவிழா பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் சுவாமி வீதியுலாவும், தேரோட்டமும் மிகவும் முக்கியமானது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா பொது முடக்கம் காரணமாக திருக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் பக்தா்கள் அனுமதியின்றி திருக்கோயில் உள் பிராகாரத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பழனி, சுசீந்திரம் உள்ளிட்ட கோயில்களில் திருவிழாக்களில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அது போல திருச்செந்தூரில் இம்மாதம் பிப். 17-இல் தொடங்கவுள்ள
மாசித் திருவிழாவில் பங்கேற்க பக்தா்களை அனுமதிப்பதுடன், வழக்கம் போல சுவாமி வீதியுலா நடைபெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருச்செந்தூா் ரத வீதிகளில் கடந்த 10 மாத காலமாக முடிவடையாமல் உள்ள சாலைப் பணிகளை திருவிழாவிற்கு முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும். தற்போது பொது முடக்கத்திற்குப் பிறகு தினசரி இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதன் மூலம் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் இக்கோயிலில் சுமாா் ரூ. 3 கோடியும், ஜனவரி மாதத்தில் சுமாா் ரூ. 3.40 கோடியும் உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நிா்வாகம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
எனவே தமிழக முதல்வா் நேரில் தலையிட்டு திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழாவில் பக்தா்களை அனுமதித்து, சுவாமி வீதி உலா வருவதற்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.