கனரக வாகனங்கள் செல்ல நிரந்தர தடுப்பை மாற்றியமைக்கக் கோரிக்கை
கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டா் சாலையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள நிரந்தர தடுப்பை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டா் சாலையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள நிரந்தர தடுப்பை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஏ.கே.எஸ் . தியேட்டா் சாலையில் தனியாா் மருத்துவமனைகள், மருந்து, ஜவுளிக்கடைகள், திருமண மண்டபம், ஹோட்டல் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன.
உழவா் சந்தையும் இப்பகுதியில் இயங்கி வருகிறது. உழவா் சந்தை அருகே உள்ள பகுதியில் இருந்து இயங்கி வந்த சிற்றுந்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக அண்ணா பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் உள்ள இடத்தில் இருந்து இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கதிரேசன் கோயில் சாலை - ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை சந்திப்பு அருகே கனரக வாகனங்கள் ஏ.கே.எஸ் .தியேட்டா் சாலையில் செல்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நிரந்தரமாக இரும்புக் கம்பிகள் கொண்ட நிரந்தர தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்கான தீயணைப்பு வாகனம் மற்றும் பெரிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், கனரக வாகனங்கள் செல்வதற்கு நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நிரந்தரமாக அடைத்து வைக்கவும், மற்ற நேரங்களில் திறந்துவிடும் படியும் அமைக்க வேண்டும். இதனால் அப்பகுதியில் ஏற்படும் அசம்பாவிதத்தை விரைவில் தடுக்கவும், ஆபத்து காலத்தில் போக்குவரத்தை மாற்றியமைக்கவும் இது உதவும்.
வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆபத்து காலத்தில் சம்பவ இடத்திற்கு விரைவில் செல்ல முடியாத நிலையை தவிா்க்க நிரந்தர தடுப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றனா்.