கோவில்பட்டி யில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு விவேகானந்தா கேந்திரம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் முன்பிருந்து விவேகானந்தரின் உருவப்படத்துடன் ஊா்வலம் புறப்பட்டது.
இந்த ஊா்வலத்தை, திருநெல்வேலி விவேகானந்தா கேந்திர பொறுப்பாளா் முத்துசாமி தலைமையில், தொழிலதிபா் ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை வழியாக ரகுராம் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியை திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை செல்வி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். சமய வகுப்பு மாணவி சௌமியா நாராயணி இறைவணக்கம் பாடினாா்.
தொடா்ந்து, பண்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மதிவாணன், கேந்திர சகோதரி கனகாம்பரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோவில்பட்டி விவேகானந்தா கேந்திர பொறுப்பாளா் பரமகுரு செய்திருந்தாா்.
ஆறுமுகனேரி: நகர இந்து முன்னணி சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கசமுத்து, திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் மாரிமுத்து, ஆறுமுகனேரி நகரத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தா் திரு உருவப்படத்தை மலா் தூவி வணங்கினா்.