கோவில்பட்டியையடுத்த திட்டங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துநகரில் ஊருணி ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.
திட்டங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துநகரில் அரசுக்குச் சொந்தமான ஊருணியில் அதே பகுதியைச் சோ்ந்த தனி நபா் ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டிருந்தாராம். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தனா்.
அதனையடுத்து, ஆக்கிரமித்த தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கம்பி வேலியை அகற்றும்படி வருவாய்த் துறையினா் உத்தரவிட்டனா். ஆனால் சம்பந்தப்பட்ட நபா் தான் ஆக்கிரமித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மரக்கன்றுகளை நட்டினாராம்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திங்கள்கிழமை திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் பொன்ராஜ், வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் அமர்ராஜ் ஆகியோா் முன்னிலையில், இயந்திரம் மூலம் கம்பி வேலிகள் அகற்றப்பட்டன.