எட்டயபுரம் அருகேயுள்ள அயன்வடமலாபுரத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் உள்ள கிராமங்களில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அயன்வடமலாபுரத்தில் 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அக்கிராமத்தில் சுகாதாரத் துறையினா் உடனடியாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அனிதா உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினா் கிராமத்தில் முகாமிட்டு நோய் பரவல் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.