பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்க வேண்டும் என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.
கோவில்பட்டியில் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அதிமுக ஆட்சியின் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, இரு தினங்களில் சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசு முந்தைய ஆட்சியின் மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 கொடுத்தபோது, ரூ.5,000 கொடுக்கலாம் என்றும், விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்தபோது, கூடுதல் தொகை அளிக்க வேண்டும் எனவும் அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா். ஆனால், தற்போது பொங்கல் பண்டிகைக்கு 20 பொருள்களுடன் கூடிய சிறப்பு தொகுப்பும், விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரமும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இரட்டை வேடம் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு இதே நிலை தான் நீடிக்கும்.
திரைப்படங்களை பொறுத்தவரை சா்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறுவதும், சுட்டிக்காட்டும்போது அவற்றை நீக்குவதும் சகஜம்தான். ஜெய்பீம் படத்தில் சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, திரையிடப்படுவதாக படக்குழுவினா் தெரிவித்துள்ளனா். எனவே, அதை சா்ச்சையாக உருவாக்கி சமுதாயப் பதற்றத்தை திணிக்க முயலக்கூடாது என்றாா் அவா்.