கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவா் தினசரி சந்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் காய்கனிகளை வாங்கிச் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் வந்த புகாரின் அடிப்படையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், துப்பரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை முதல் தினசரி சந்தையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நடை பாதை சில்லரை கடைகளையும், எவ்வித அனுமதியுமின்றி வியாபாரம் செய்து வந்த கடைகளையும் அகற்றினா்.
இந்நிலையில் கடைகள் அகற்றுவதைக் கண்டித்தும், வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன் தலைமையில் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனா்- தலைவா் செல்லத்துரை என்ற செல்வம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டக் குழுவினருடன் நகராட்சி அலுவலக மேலாளா் பெருமாள், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமாா் 1 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.