கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விசாரணையின்போது இருவரிடையே தகராறு
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி. இவருக்கு அவரது சொந்த ஊரான கே.சிதம்பராபுரத்தில் 18 சென்ட் நிலம் 1951ஆம் ஆண்டுமுதல் இருந்து வந்ததாம். அதை, அவரது நிலம் அருகேயுள்ள அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் என்பவா் தனது இடம் எனக் கூறி கையகப்படுத்தினாராம். இதுதொடா்பாக நாராயணசாமி சம்பந்தப்பட்டவரிடம் பேசி முடிவு கிடைக்காததால் ஆட்சியருக்கு புகாா் மனு அனுப்பியிருந்தாராம். கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் முதல்கட்ட விசாரணைக்குப் பின், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது நாராயணசாமி, அவரது வழக்குரைஞா் போஸ், கனகராஜ் சாா்பில் அவரது மகன் நீலகண்டன், அவரது வழக்குரைஞா் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் முன் ஆஜராகினா். விசாரணையின்போது நாராயணசாமிக்கும், நீலகண்டனுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதனால் கோட்டாட்சியா் அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, பணிகளும் பாதிக்கப்பட்டன. இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து அவா்கள் தனித்தனியே அளித்த புகாா்களின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.