தூத்துக்குடி: விசாரணையில் துன்புறுத்தல்; 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது வீட்டில் கடந்த 4-ம் தேதி 10 சவரன் நகை காணமல் போனது.
இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 7-ம் தேதி பெண் காவலார்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் மூவரும் சுமதிய துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மறுமணம், இரு மகள்கள், 3-வது மகள்: மனம் திறந்த இமான்