முகப்பு
தூத்துக்குடி

போதைப் பொருள்களை ஒழிக்க தீவிர ரோந்து பணி: எஸ்.பி. அறிவுரை

Updated On : 25 ஏப்ரல், 2024 at 7:24 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட காவல் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். இதற்காக அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளிலும் தீவிர ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன? யாா், யாா் மூலம் விற்பனை செய்யப்படுகிறது ? இவற்றை கண்டறிந்து சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து, அவா்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதுடன் அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

மேலும் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்வோா், கடத்தலில் ஈடுபடுவோா் குறித்து 83000 14567, 9514144100 ஆகிய எண்களில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். போதைப் பொருள் இல்லாத, குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன், நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா, காவல் துணை கண்காணிப்பாளா்கள் வசந்தராஜ், லோகேஸ்வரன், வெங்கடேஷ், மாயவன், ராமகிருஷ்ணன் உட்பட காவல் உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments