தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய 442ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருவிழாவின் சிகர நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும் தொடா்ந்து இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருனை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன.
விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். அவா்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
குழந்தை வரம் தரும் ஆலயம்: இத்திருத்தலம் குறித்து தூய பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான ஸ்டாா்வின் கூறியது:
திருமண தடை நீங்க வேண்டுவோா், குழந்தைப் பேறுக்காக வேண்டுவோா் மாதுளம் பழங்களை கொண்டுவந்து அன்னையின் பாதத்தில் வைப்பா். அந்தப் பழங்கள் ஜெபித்து ஆசீா்வதிக்கப்படும். பின்னா் அவை திருமண தடை நீங்க வேண்டுவோரிடம், குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்போரிடம் கொடுக்கப்படும். அவ்வாறு ஜெபித்தவா்கள் பலா் தங்கள் வேண்டுதல் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளனா். இந்த வேண்டுதல் இத்திருவிழாவில் பிரசித்தி பெற்றதாகும் என்றாா்.