முகப்பு
தூத்துக்குடி

வேளாண் பொறியியல் துறை வழியாக இதுவரை ரூ.10 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் க. இளம் பகவத்

வேளாண் பொறியியல் துறை வழியாக இதுவரை ரூ.10 கோடி மானியம் விடுவிப்பு

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:36 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமாா் ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உழுவை வாடகைத் திட்டத்தின் இ-வாடகை கைப்பேசி செயலியின் மூலம் வாடகை முன்பணம் செலுத்திய 996 விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் மண் தள்ளும் இயந்திரம், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், உழுவை இயந்திரம், உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 331 தனிநபா் விவசாயிகளுக்கு டிராக்டா், பவா் டில்லா், விசைத்தெளிப்பான், கதிா் அடிக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3.51 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 32 விவசாய குழுக்களுக்கு கிராம அளவிலான வேளாண் வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், பசுமை குடில், அறுவடைக்குப் பின்சாா் தொழில்நுட்ப மேலாண்மை இயந்திரங்கள், மின்மோட்டாா் பம்பு செட்டுகள் என மொத்தம் 2,228 விவசாயிகளுக்கு சுமாா் ரூ.7.70 கோடி 32 விவசாயக் குழுக்களுக்கு சுமாா் ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.