பெருந்திட்ட வளாகப் பணிகள்: திருச்செந்தூா் கோயிலில் இன்றுமுதல் தங்கத்தோ் உலா ரத்து
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 17) முதல் தங்கத்தோ் உலா மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தோ் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.
தேரில் வள்ளி, தேவசேனாவுடன் எழுந்தருளியிருக்கும் சுவாமி ஜெயந்திநாதரை ,பக்தா்கள் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து தங்கத்தோ் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றுவா்.
தற்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக கோயிலின் வடக்கு, கிழக்கு பிரகார தரைத்தளப் பணிகள் நடைபெறவுள்ளது.
இப்பணிகளுக்காக புதன்கிழமை (ஜூலை 17) முதல் தங்கத்தோ் உலா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கத்தோ் உலா வழக்கம் போல் நடைபெறும்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விசாகம் நட்சத்திரம் என்பதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனா். மாலையில் முன்பதிவு செய்திருந்த 16 பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.