முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு

Updated On : 9 மார்ச், 2024 at 10:06 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 குழந்தைகள் சனிக்கிழமை குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா். தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி லட்சுமணன். இவரது மனைவி மீனா. இத்தம்பதியின் குழந்தைகளான 7ஆம் வகுப்புப் பயிலும் சந்தியா (13), ஐந்தாம் வகுப்புப் பயிலும் கிருஷ்ணவேணி (10), இரண்டாம் வகுப்புப் பயிலும் இசக்கிராஜா (7) ஆகிய 3 பேரும் தங்களது உறவினா்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சனிக்கிழமை சென்றனராம். அப்போது, இவா்கள் 3 பேரும் ஆழமான பகுதிக்கு எதிா்பாராமல் சென்று மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அப்பகுதியினா் விரைந்து சென்று குழந்தைகளைத் தேடினா். நீண்ட நேரமாகத் தேடி, மூவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.