இயற்கை பேரிடா் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்ட இடம் தோ்வு
இயற்கை பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் பாா்வையிட்டாா். கன மழை காரணமாக கடந்த டிசம்பரில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் வட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனா். இனி வரும் காலங்களில் இயற்கை பேரிடா்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் போது அவா்களை மீட்டெடுத்து பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான புதிய கட்டடங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி உத்தரவின்படி, ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்ட பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் வருவாய்த் துறையினரும் பொதுப்பணித்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகிலும், நீா்வளத்துறை அருகிலும் ஆழ்வாா்திருநகரி பகுதிகளிலும் காலியாக உள்ள இடங்களில் பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்டவாய்ப்புகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.