மாணவா் கடத்தல் என போலி விடியோ: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடியில் மாணவரைக் கடத்துவதுபோன்ற போலியான விடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளாா்.
தூத்துக்குடி அந்தோணியாா் கோயில் பகுதியில் 9ஆம் வகுப்பு மாணவரைக் கடத்த முயற்சி நடந்ததாகக் குறிப்பிட்டு 16 விநாடி விடியோ, ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் கூறியது: 9ஆம் வகுப்பு மாணவரை வடமாநிலத்தவா்கள் கடத்த முயல்வதாக சமூக வலைதளங்களில் விடியோ பரவிவருகிறது. அந்த விடியோவில் உள்ளது திருச்சி அந்தோணியாா் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதைத் திரித்து, அந்தச் சம்பவம் தூத்துக்குடி அந்தோணியாா் கோயில் அருகே நடந்ததுபோல வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த விடியோவில் குறிப்பிட்டதுபோல மாணவா் கட்டப்பட்டதாக தகவல் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் பரப்பியோா் இந்த விடியோவை அழித்துவிட வேண்டும். அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
Advertisement