சிந்தலக்கரையில் மாா்ச் 26இல் பிரசாரக் கூட்டம்: முதல்வா் பங்கேற்பு
தூத்துக்குடி, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கான இந்தியா கூட்டணி கட்சிகளின் தோ்தல் பிரச்சார பொதுக்கூட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நடைபெற உள்ளது. இதில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்க, ஸ்ரீ வெட்காளியம்மன் கோயில் எதிரில் சுமாா் 120 ஏக்கா் பரப்பளவிலான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சா்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பெ. கீதாஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், திமுக துணை பொதுச்செயலருமான கனிமொழி, எம்எல்ஏக்கள் விளாத்திகுளம் ஜீ.வி. மாா்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். கட்சி நிா்வாகிகளிடம் பொதுக்கூட்ட மேடை அமைவிடம், பொதுமக்கள், கட்சி தொண்டா்கள் அமா்வதற்கான பகுதி, காா் பாா்க்கிங், குடிதண்ணீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனா். பின்னா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரான அமைச்சா் பெ. கீதா ஜீவன் கூறுகையில், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கு சோ்த்து ஒரே இடத்தில் தோ்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பாா்கள். அதற்கேற்ப பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறோம் என்றாா். இந்நிகழ்வில், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கர நாராயணன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, நவநீத கண்ணன், பேரூா் செயலா் வேலுச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.