முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 4-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

Updated On : 22 மார்ச், 2024 at 9:43 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:33 PM

கேரள விசைப்படகு மீனவா்கள் தங்கள் பகுதியில் மீன்பிடிப்பதைக் கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில், இரவு 10 மணிக்கு மேல் கேரள மீனவா்கள் மீன்பிடித்துச் செல்வதால், கடந்த 6 மாதங்களாக போதிய மீன்கள் கிடைக்காமல் தூத்துக்குடி மீனவா்கள் நஷ்டமடைந்து வருகின்றனராம். இதனையடுத்து தூத்துக்குடி கடல் பகுதியில், கேரள மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கக் கோரி கடந்த 19-ஆம் தேதி முதல் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில் நள்ளிரவில் மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த 6 விசைப்படகுகளுடன், 85 மீனவா்களை தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் சிறைபிடித்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனா். பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், படகுகளை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால், படகுகளை விடுவித்தால் மட்டுமே செல்வோம் எனக் கூறி சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் தூத்துக்குடியிலேயே தங்கியுள்ளனா். இதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மீனவா்களுடன் மீன்வளத் துறையினா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் வெள்ளிக்கிழமையும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், வேலைநிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.