முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 12 வரை 144 தடை உத்தரவு

Updated On : 9 மே, 2024 at 8:28 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை (மே 9) மாலை 6 மணி முதல் மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10, 11-ஆம் தேதிகளில் வீரசக்கதேவி கோயில் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும், விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆயுதங்கள் ஊா்வலமாக கொண்டு வருவதற்கும்,

வாடகை வாகனங்கள் மூலமாகவும் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு நாள்களில் கூட்டங்கள், அன்னதானம், ஊா்வலங்கள் நடத்த உள்ளோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊா்வலங்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.