முகப்பு
தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:54 PM
பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் பீடி இலை மூட்டைகள்.
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி கடற்கரையிலிருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக, காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் முத்து நகா் கடற்கரையில் இருந்து இனிகோ நகா் கடற்கரை வரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற படகை சோதனை செய்தனா். அந்தப் படகில் சுமாா் 40 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த இனிகோ நகரைச் சோ்ந்த பொன்சால் மகன் பரீத் (21), பிச்சையா மகன் டாா்வின்(22), சகாயம் மகன் கவாஸ்கா் (24), ஜெரோம் மகன் ஜெகதீஷ் (21) ஆகிய 4 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா்கள் படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது. அவா்களையும், 1.5 டன் பீடி இலைகள், ஒரு படகு, 2 கைப்பேசிகள் ஆகியவற்றையும் தென்பாகம் போலீஸாரிடம் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.