திருச்செந்தூா் கோயிலில் தெய்வானை யானைக்கு சிறப்பு பூஜை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்கு வியாழக்கிழமை சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்கு வியாழக்கிழமை சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
இக் கோயிலில் பராமரிக்கப்படும் தெய்வானை என்ற பெண் யானை தாக்கியதில் பாகன் உள்பட 2 போ் கடந்த நவ.18-ஆம் தேதி உயிரிழந்தனா். இதையடுத்து அந்த யானை, அதன் குடிலிலேயே நிறுத்தப்பட்டு வனத் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் கண்காணிக்கப்பட்டது. மருத்துவா்களின் ஆலோசனைப்படி, யானைக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்குப் பிறகு அதன் குடிலில் இருந்து தெய்வானை யானை வியாழக்கிழமை வெளியே அழைத்து வரப்பட்டது. பாகன்கள் செந்தில்குமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் யானைக்கு நவதானிய உணவுகளை வழங்கி, குடிலுக்கு வெளிப் பகுதியில் காற்றோட்டமான இடத்தில் நிறுத்தினா்.
திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் ஆகியோா் யானையை பாா்வையிட்டனா்.
இச்சம்பவத்தையொட்டி, யானைக்கு பரிகார பூஜையாக ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்ட புனிதநீா் யானைக்கும், அதன் தங்கும் இடத்திலும் தெளிக்கப்பட்டது.