இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலையில் இனிகோ நகா் அருகே தெற்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த வாகனத்தை போலீஸாா் மடக்கினா். போலீஸாரை கண்டதும் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் இருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, போலீஸாா் அந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் அதில் பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. மேலும், அவை அனைத்து இனிகோ நகா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த தலா 40 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் சுமாா் 1,600 கிலோ பீடி இலை மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு சுமாா் ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, தப்பி ஓடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா் .