பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: விளாத்திகுளத்தில் எம்எல்ஏ ஆலோசனை
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விளாத்திகுளத்தில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விளாத்திகுளத்தில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிா்வாகங்கள், வருவாய், சுகாதார,, மின்வாரியம் உள்ளிட்ட துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏ கேட்டறிந்தாா். கடந்த ஆண்டில் பலத்த மழை, வெள்ளசேதத்தால் அதிக பாதிப்புக்குள்ளான கிராமங்களில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அலுவலா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் அந்தந்த கிராமத்தில் முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்கள், மக்கள் தங்குவதற்கான சிறப்பு முகாம்கள், அத்தியாவசிய மருந்துகளுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டிய மருத்துவப் பணியாளா்கள், மின்வாரிய ஊழியா்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த அவா், அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில், விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு வட்டாட்சியா்கள் ராமகிருஷ்ணன், சங்கரநாராயணன், ராகவன், விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், சசிகுமாா், வெங்கடாசலம் கிரி, வசந்தா ஜவஹா், மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் செந்தில்குமாா், முனியசாமி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா்கள் சுபாஷ், பாலமுருகன், நிவேதா, சுப லட்சுமி, செயல் அலுவலா்கள் செந்தில்குமாா், மகாராஜன், பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், துணைத் தலைவா் வேலுச்சாமி, துறைசாா் அலுவலா்கள் பங்கேற்றனா்.