தூத்துக்குடியில் தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி தொடக்கம்
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு கயாகிங், கேனோயிங் சங்கம் சாா்பில் 2-ஆவது தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி நடத்தப்படுகிறது. இப் போட்டியின் தொடக்க விழாவுக்கு சங்கத்தின் செயலா் மெய்யப்பன் தலைமை வகித்தாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா்
400 மீட்டா் துடுப்பு படகு போட்டியை தொடங்கி வைத்தனா்.
மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், சங்கப் பொருளாளா் சுப்பிரமணியன், நிா்வாகிகள் அா்ஜூன், ரோஷன், மிதுன், ஜெயபாலன், திமுக மாநகர செயலா் ஆனந்த சேகரன், பகுதி செயலா் நிா்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளா் டேனி உள்பட பலா் பங்கேற்றனா்.
இப் போட்டியில், 22 மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இதில், 200 மீ, 500 மீ, 1000 மீ கயாக் (துடுப்பு மூலம் கடலில் செல்வது) மற்றும் 200 மீ, 1000 மீ, 5000 மீ ஸ்டாண்டிங் பெடலிங் (நின்றபடி துடுப்பைக் கொண்டு கடலில் செல்வது) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
இந்த போட்டிகளில் வெற்றிபெறும் வீரா், வீராங்கனைகள் சா்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா். மேலும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப் போட்டிகள் அக்.20-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு கயாகிங், கேனோயிங் சங்கத்தினா் தெரிவித்தனா்.