முகப்பு
தூத்துக்குடி

நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வட்டாட்சியா், நில அளவையருக்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நிலத்தை அளவீடு செய்யாத வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோா் நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்குமாறு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:36 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நிலத்தை அளவீடு செய்யாத வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோா் நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்குமாறு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

கயத்தாறு பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா், தனது ஓா் ஏக்கா் 65 சென்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோரை அணுகியதுடன், அதற்கான பணம் செலுத்தி விண்ணப்பித்தாா். ஆனால், நிலத்தை அளவீடு செய்ய நில அளவையா் வரவில்லையாம். பலமுறை நேரில் சென்று நினைவூட்டியும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

இதுதொடா்பாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மாரியம்மாள் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, நிலத்தை அளவீடு செய்து அதற்குரிய ஆவணங்களையும், மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரத்தையும் மாரியம்மாளிடம் வழங்குமாறு வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோருக்கு உத்தரவிட்டனா்.