கயத்தாறு அருகே 11 புதிய தொகுப்பு வீடுகள் திறப்பு
தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட கயத்தாறை அடுத்த மானங்காத்தான் கிராமத்தில் 11 புதிய தொகுப்பு வீடுகளை கனிமொழி எம்.பி. புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட கயத்தாறை அடுத்த மானங்காத்தான் கிராமத்தில் 11 புதிய தொகுப்பு வீடுகளை கனிமொழி எம்.பி. புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இங்கு 1996இல் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதாகியிருந்தன. இதையறிந்த கனிமொழி எம்.பி. தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 94.4 லட்சத்தில் 20 தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தாா். அதில் முதல்கட்டமாக கட்டப்பட்ட 9 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், 2ஆம் கட்டமாக 11 வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கனிமொழி எம்.பி. புதிய வீடுகளைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி பயனாளிகளிடம் ஒப்படைத்தாா்.
அப்போது, கனிமொழி எம்.பி. ஒரு வீட்டை மூதாட்டியிடம் ஒப்படைத்து ‘இப்போது சந்தோஷமா?’ எனக் கேட்டாா். அவரை அந்த மூதாட்டி வணங்கி கண்ணீா் மல்க ‘நன்றியம்மா’ எனக் கூறினாா்.
நிகழ்ச்சியில், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரகிருஷ்ணன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரியா குருராஜ், தெற்கு இலந்தைகுளம் ஊராட்சித் தலைவி செல்வி, திமுக ஒன்றியச் செயலா் கருப்பசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.