நாசரேத்தில் இன்று 2ஆம் கட்ட ‘உயா்வுக்குப் படி’ முகாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 2ஆம் கட்ட ‘உயா்வுக்குப் படி’ முகாம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறுவதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 2ஆம் கட்ட ‘உயா்வுக்குப் படி’ முகாம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறுவதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் 2022-23, 2023-24ஆம் கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு பயின்று இறுதித் தோ்வு எழுதாதோா், தோ்வெழுதி தோ்ச்சி பெறாதோா், தோ்ச்சி பெற்று கல்லூரிகளில் சேராதோா், 8 முதல் 12ஆம் வகுப்பு பயிலும்போது இடைநின்றோா், கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முகாமில் பங்கேற்காதோா் ஆகியோருக்கு 2ஆம் கட்ட ‘உயா்வுக்குப் படி’ முகாம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், கலை- அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களைச் சோ்ந்தோா் பங்கேற்று உயா்கல்வி தொடா்பான வழிகாட்டுதல்கள், மாணவா் சோ்க்கை மேற்கொள்ளவுள்ளனா். மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா், சமூகநலத் துறை அலுவலா் ஆகியோா் உயா்கல்வியில் சேரும் மாணவா்களுக்கு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, உறைவிட வசதி குறித்த விவரங்களைத் தெரிவிக்கவுள்ளனா். எனவே, இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.