மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நடிகர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு!!
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்காக, பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அறிவிக்கப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகத் தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி, தனித்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டு, மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 144 வேட்பாளர்களுடன் முதல்கட்ட பட்டியலை திங்கள்கிழமை (மார்ச் 16) வெளியிட்டது பாஜக. இதில், முதல்வா் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், 111 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், முன்னணித் தலைவர்கள், கட்சித்தாவிய தலைவர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க பெயர்களாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் ஜகத்டால் தொகுதியிலும், கௌஸ்தவ் பக்ச்சி பாரக்பூர் தொகுதியிலும், நடிகையான ரூபா கங்குலி சோனார்பூர் தக்ஷின் தொகுதியிலும், முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் தபாஸ் ரேய், மணிக்தலா தொகுதியிலும், நடிகை பாப்பியா அதிகாரிக்கு டோலிகஞ்ச் தொகுதியிலும், பிரியாங்கா திரெவால் எண்டல்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.