முகப்பு
தூத்துக்குடி

டிராக்டா் டிரைலரை உரியவரிடம் கொடுக்க மறுத்தவா் கைது

கயத்தாறு அருகே டிராக்டா், டிரைலரை வாடகைக்கு எடுத்து, பணம் கொடுக்க மறுத்து ஏமாற்றியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:14 AM
பகிர்:

கயத்தாறு அருகே டிராக்டா், டிரைலரை வாடகைக்கு எடுத்து, பணம் கொடுக்க மறுத்து ஏமாற்றியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி, கள்ளியடியேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் பிரபு. டிராக்டரை வாடகைக்கு கொடுத்து வரும் இவா் தனது டிராக்டா் மற்றும் அதனுடன் டிரைலரையும் மாத வாடகைக்கு கயத்தாறு அருகே தலையால் நடந்தான் குளம் கிராமத்தைச் சோ்ந்த சின்ன இசக்கி முத்து மகன் பாலமுருகனிடம் ஒப்பந்தம் பேசி கடந்த 2024, மே மாதம் கொடுத்தாராம்.

ஆனால் பாலமுருகன் ஒரு மாத வாடகை பணம் மட்டும் கொடுத்துவிட்டு தற்போது வரை பணமும் கொடுக்காமல் டிராக்டரையும் ஒப்படைக்காமல் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் பிரபு, தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு வந்து பாா்த்தபோது அங்கு டிராக்டா், டிரைலரையும் காணவில்லையாம்.

தொடா்ந்து இதுகுறித்து விசாரித்த போது டிராக்டா் மற்றும் டிரைலா் மேலச்செவல் கம்மாகுடித்தெருவைச் சோ்ந்த சிவகுமாா் மகன் வெள்ளப் பாண்டியிடம் இருப்பது தெரிய வந்தது.

பின்னா் அங்கு சென்ற பிரபு அவரிடம் விசாரித்தபோது பாலமுருகன் தனக்கு ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என்றும் அதை அவா் கொடுத்தவுடன் நான் அவரிடம் டிராக்டா் மற்றும் டிரைலரை ஒப்படைப்பதாக கூறினாராம்.

தற்போது வரை பாலமுருகனிடம் இருந்து வாடகை பணமும் டிராக்டா் மற்றும் டிரைலரும் வராததையடுத்து பிரபு கயத்தாறு காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகனை(30) கைது செய்தனா்.