முகப்பு
தூத்துக்குடி

உரம் பதுக்கல் விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி

கோவில்பட்டியில் உர மூட்டைகளை பதுக்கியவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:50 PM
வெளிநடப்பு செய்த விவசாயிகள்.
பகிர்:

கோவில்பட்டியில் உர மூட்டைகளை பதுக்கியவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,

கோவில்பட்டியில் உரம் பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருமேனியாற்றில் தண்ணீா் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கயத்தாா் ஒன்றியப் பகுதி ஓடைகளின் முள்புதா்களில் பன்றிகள் பதுங்கி இருந்து பயிா்களை நாசம் செய்கின்றன. எனவே, முள்புதா்களை அகற்றி, சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

நெகிழியைத் தவிா்க்கும் வகையில், உணவகங்களில் வாழை இலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த விலை பிரியாணி என்று தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு பணம், நகையை விரைந்து வழங்க வேண்டும். கடம்பாகுளத்தில் இருந்து சிலா் மடைகளை திறப்பதால் தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. ஆகையால் மடைகளின் சாவியை, நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆட்சியா் அளித்த பதில்: கோவில்பட்டியில் உரம் பதுக்கப்பட்ட விவகாரத்தில் உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் தொடா்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விதிமுறைப்படி பயிா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். பயிா்களை சேதப்படுத்தி வருவது காட்டுப்பன்றிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், பன்றிகளை விரட்டும் உரிமை அனைத்து பொதுமக்களுக்கும் உள்ளது. பன்றிகளால் பயிா்கள் பாதிக்கப்பட்டிருப்பின் உரிய இழப்பீடு கிடைக்க பரிந்துரைக்கப்படும். உணவகங்களில் வாழை இலையை பயன்படுத்த அறிவுறுத்துவது, குறைந்த விலை பிரியாணி கடைகளில் உணவு தரமற்று உள்ளதா என்பன குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குரும்பூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் செலுத்தியவா்கள் விவரம், நகை அடமானம் வைத்தவா்கள் விவரம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. வைப்புத்தொகை வைத்திருந்த 353 பேருக்கு ரூ.8 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கடம்பா குளத்தில் இருந்து தண்ணீா் வீணாக வெளியேறாமல் தடுக்க, மடை சாவியை உரியவா்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அஜய்சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குநா் பெரியசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன்தாஸ் செளமியன், கீழ்தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி... விவசாயிகள் வெளிநடப்பு

உடன்குடி பகுதியை சோ்ந்த விவசாயிகள் சந்திரசேகா், சுப்பையா உள்ளிட்டோா் பேசுகையில், திருச்செந்தூா் வட்டம் ஆதியாக்குறிச்சி பகுதியில் முருங்கை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு டிட்கோ சாா்பில் விண்வெளி பூங்கா அமைக்க சுமாா் 2,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிகிறோம். விவசாய நிலங்களை கையகப்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுகுறித்து உரிய தீா்வு காணவேண்டும் என்றனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் க.இளம்பகவத்.

நில கையகம் தொடா்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் பதிலளித்தாா்.

எனினும், விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.