சாத்தான்குளம்: ராபி பருவத்தில் வாழைப் பயிருக்கு பயிா் காப்பீடு செய்துகொள்ள ஆழ்வாா்திருநகரி தோட்டக்கலை உதவி இயக்குநா் கெளரிசங்கா் (பொறுப்பு) விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் வாழைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் தாங்கள் சாகுபடி செய்த வாழைப் பயிருக்கு காப்பீடு செய்து இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பீடு பெறுவதற்கு இத்திட்டம் மிக பயனுள்ளதாகும்.
ராபி பருவத்தில் தோட்டக்கலைப் பயிரான வாழைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் பயிா் காப்பீட்டிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள பிா்காவில் 2025-26-ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கு பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். 2025-26ஆம் ஆண்டுக்கான ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிரான வாழைக்கு 28.02.2026 வரை விண்ணப்பிக்கலாம். பிரீமியம் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1756.16 /-ம் அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்திட வேண்டும். இப்பயிா் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயா், விலாசம், நில பரப்பு, சா்வே எண் மற்றும் உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையை செலுத்தி, இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.