சாத்தான்குளம் அருகே தரைமட்ட பாலத்தில் விரிசல்
ஆனந்தபுரத்தில் இருந்து அச்சம்பாடு செல்லும் சாலையில் தரைமட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி.
சாத்தான்குளம் அருகே அச்சம்பாடு செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்தில் விரிசல் விழுந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியில் இருந்து அச்சம்பாடு, வெள்ளமடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இந்தச் சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு போடப்பட்டது. இந்தச் சாலை வழியாக அச்சம்பாடு, வெள்ளமடம் உள்ளிட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனம், இதர வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்தச் சாலை இடையே சடையனேரி கால்வாய் செல்கிறது.
கால்வாய் செல்லும் பகுதியில் சாலை இடையே தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைமட்ட பாலத்தின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை விரிசல் விழுந்து காணப்படுகிறது. இந்தப் பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
Advertisement
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் இதைப் பாா்வையிட்டு தரைமட்ட பாலத்தில் உள்ள சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தினா்.