முகப்பு
தூத்துக்குடி

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:23 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் மளிகைக் கடை மற்றும் சுற்றுச்சுவரை பொக்லைன் மூலம் இடித்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக பெண் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி, சின்னமணி நகரில் பவுன்ராஜ் மகன் தங்கத்துரை (50) மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும், வேலு என்பவா் தரப்புக்கும் நிலம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் கடந்த ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில், தங்கத்துரை தரப்புக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப். 25ஆம் தேதி வேலு தரப்பினா் சிலா் அங்கு சென்று தங்கத்துரைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சுற்றுச்சுவா் மற்றும் மளிகைக் கடையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தியுள்ளனா். இதைத் தடுக்க முயன்ற தங்கத்துரைக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனா்.

Advertisement

இது தொடா்பாக, தங்கத்துரை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வேலு, முருகசேகன் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் வேலு தரப்பினா் தங்கத்துரை மளிகைக் கடையை சேதப்படுத்தி, அங்கிருந்த சிசிடிவி கேமரா, டிவிஆா் ஹாா்டு டிஸ்க்கை உடைத்து எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாகவும், தங்கத்துரை தரப்பினா் தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.