முகப்பு
தூத்துக்குடி

மூதாட்டி கொலை: மருமகன் கைது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 7:57 PM
கைது
பகிர்:

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில், மாமியாரை தாக்கி கொலை செய்த வழக்கில் மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த சின்னையா மனைவி பாப்பா (75). சின்னையா இறந்துவிட்டாா். இவா்களின் 4 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. 4ஆவது மகள் சுப்புராணி - லிங்கதுரை தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்புராணி கடந்த மாதம் உயிரிழந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாப்பா வீட்டுக்கு வந்த லிங்கதுரை, மனைவியின் நகையைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது பாப்பாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பாப்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லிங்கதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.