கட்டாரிமங்கலம், வைரவம், பள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளம், கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தா் கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கி சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
இரவு 9 மணி முதல் ஸ்ரீ அழகிய கூத்தா் அருள்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு 2ஆம் கால பூஜையும், காலை 4.30 மணிக்கு 4ஆம் கால பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
சாத்தான்குளம், வைரவம், ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயில், பள்ளக்குறிச்சி, ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடா முலை அம்மன் கோயில், புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் கோயில், தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கயில்களிலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.