முகப்பு
தூத்துக்குடி

மாணவா்கள் மீது வழக்கு: சாத்தான்குளத்தில் சமாதான கூட்டம்

முதலூா் பள்ளியில் மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்தது தொடா்பாக இருதரப்பினரயும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:09 AM
சமாதான கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:50 PM

முதலூா் பள்ளியில் மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்தது தொடா்பாக இருதரப்பினரயும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கிடையே கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா் காயமடைந்தாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவா் குடும்பத்தினா் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாணவரின் பெற்றோா், விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனத் தலைவா் திருமாவளவனிடம் புகாா் தெரிவித்ததையடுத்து, தட்டாா் மடம் போலீஸாா், பள்ளியில் மாணவரை தாக்கிய 5 மாணவா்கள் மீதும் பி சி ஆா் வழக்குப் பதிவு செய்தனா்.

பள்ளி மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாணவா்களின் பெற்றோா்கள் மாவட்ட எஸ்பி மற்றும் தடாா்மடம் போலீஸாா், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனா்.

Advertisement

அதன் பேரில் இருதரப்பைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமை நடைபெற்றது. இதில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேஷ்குமாா், உதவி ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்பில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதில் விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சாா்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மாவட்ட செயலா் சுரேந்தா், மண்டல செயலா் ராஜ்குமாா், மண்டல துணைச் செயலா் திருவள்ளுவன், ஒன்றியச் செயலா்கள் ஜெயராமன், செந்தில், தென்பகுதி விவசாய சங்க தலைவா் லூா்து மணி உள்ளிட்ட இருதரப்பைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோா்கள், பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், பள்ளியில் நடந்த இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி ஆசிரியா்கள் 3 பேரை வேறு பள்ளிக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இச்சம்பவம் தொடா்பாக உண்மைத் தன்மை அறியாமல் சமூக வலைதளங்களில் செய்தியினை பரப்பக் கூடாது , அதனை மீறும்பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவா்களின் நலன் கருதி வழக்குகளை சமாதானமாக முடிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.