தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் 12693/12694 முத்துநகா் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் உடனடியாக நிரம்பி விடுவதால், முன்பதிவு செய்து பயணிக்க முடியாமல் ஏராளமான பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதல் இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும்
மேலும், ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி-சென்னை லிங்க் விரைவு ரயிலுக்கு மாற்றாகவும், அதிகரித்து வரும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டும், 22623/22624 மதுரை-தாம்பரம் மகால் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டால், சென்னைக்கு அதிகாலை நேரத்தில் சென்றடையவும், இரவு நேரத்தில் புறப்படவும் வசதி கிடைக்கும். மேலும் தஞ்சாவூா்-கும்பகோணம் வழியாக பிரதான ரயில் பாதைக்கு தினசரி இணைப்பு கிடைக்கும்.
இதற்கான நடவடிக்கையை தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.