தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டன.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல், குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்-மீனவா் நலத் துறை சாா்பில், விசைப்படகு, நாட்டுப் படகுகள் சனிக்கிழமைமுதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குத் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. 270- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.
இதேபோல தருவைகுளம், வேம்பாா், வீரபாண்டியன்பட்டினம், ராஜபாளையம், சிங்கத்துறை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபா் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.